"ஸ்பாட்டுக்கே" போயிட்டாரே சீமான்.. ஒருத்தராவது வந்தீங்களா.. காரணமே திமுகதான்.. திகுதிகு திருப்பத்தூர்
திருப்பத்தூர் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான், திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார்
திருப்பத்தூர்: வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும், காங்கிரசும்தான் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பத்தூரில் தாலுகா அலுவலகத்தில் குறவன் (எஸ்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதி சான்றிதழ் தவிர வேறு சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்து, இந்த நெடும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.. நேற்று 7-வது நாள் போராட்டம் நடந்தது.. ஆண்களும், பெண்களும், கூடைகள் பின்னி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்..

குற்றப்பரம்பரை
இன்றும் 8-வது நாளாக அவர்களது போராட்டம் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.. அத்துடன் நேரடியாகவே சென்று, சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆதரவாகவும் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: பட்டியல் சான்றிதழ் கேட்டு பசியும் பட்டினியுமாக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு மனம் வருந்துகிறது... ஆதி தமிழ் குடி குறவன் குடிதான். வெள்ளைக்காரன் காலத்தில் குறவன் இன மக்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராடக்கூடியவர்கள் என்பதால் அவர்களை அடக்கி வைக்க குற்றப்பரம்பரை என்று பிரித்து வைத்தனர்.

புரட்சி படை
இன்று வரை அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்காமல் மறுக்கப்பட்டுள்ளது... ஆட்சியில் இருப்பவர்கள், நரிக்குறவர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடுவதை சாப்பிடுகிறார்களா? இந்த மக்களுக்காக போராட புரட்சி படை உருவாகியுள்ளது.. 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக இங்கு போராடி வரும் குழந்தைகளை அதிகாரிகள் ஒருத்தருமே திரும்பி பார்க்கவில்லை. நீங்கள் நினைத்தது நடக்கும் வரை போராட வேண்டும். இது உங்கள் போராட்டம் இல்லை.... இது என்னுடைய போராட்டம்... இந்த அரசு, முதலில் சான்றிதழ் வழங்கி விட்டு அதற்கு பிறகு, சமூக நீதி பற்றி பேச வேண்டும்...

பசி + பட்டினி
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நாளைக்கு வீதிக்கு நிச்சயம் வருவார்கள்... இன்று வீதியில் இருக்கும் நீங்கள், ஒருநாள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வீர்கள்... மாவட்ட கலெக்டருக்கு அன்பாக கோரிக்கை ஒன்றை நாங்கள் வைக்கின்றோம், பசியும், பட்டினியுமாக போராடுபவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு, இன்று போராடி கொண்டிருக்கும் உங்களை தேடி வருவார்கள். நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அனைவரும் இணைந்து போராடுவோம்" என்று சீமான் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார்...

குறவன் பசி
இதற்கு பிறகு, சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது, "குறவன் இன மக்கள் கடந்த 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக போராடி வருகிறார்கள்.. எனவே, மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. இதுகுறித்து நடவடிக்கை இல்லை என்றால் துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும் காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications