"சோறு தண்ணி இல்லை".. ஆனா வீட்டு வேலை மட்டும்! கொலை வழக்கில் இந்திய வம்சாவளியினருக்கு 14 ஆண்டு சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்திருந்த பணிப்பெண்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மீது தாக்குதல் அதிக அளவு தொடுக்கப்படுகின்றன. இது தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பிரேமா(64) மற்றும் அவரது மகள் காயத்ரி(42) ஆகியோர் குடியிருந்த வீட்டில் 24 வயது மதிக்கத்தக்க பியாங் நங்கை டோன் எனும் பணிப்பெண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு தாய் பிரேமாவும் அவரது மகள் காயத்ரியும் ஒத்துழைக்காத நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறையில் வைத்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது பியாங் மியான்மர் நாட்டை சேர்ந்தவராவார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையாக இருந்த நிலையில், சிங்கப்பூர் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என வந்திருக்கிறார்.
அன்று ஜீரோ டிகிரிக்கு கீழ் பனிப்பொழிவு! இன்று சூறாவளி மழை! வைத்து செய்யும் வானிலை! திணறும் அமெரிக்கா
பணிப்பெண்
அப்போதுதான் பிரேமாவும் ஒரு பணிப்பெண்னை தேடியிருந்திருக்கிறார். இந்நிலையில் பியாங், பிரேமா வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்து சேர்ந்திருக்கிறார். எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு நல்லபடியாகதான் சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இது அப்படியே தலைக்கீழாக மாறிப்போனது. பிரேமா தன்னுடைய சுயரூபத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். முதலில் சாப்பாட்டை குறைத்திருக்கிறார். மீதமான சாப்பாட்டை குப்பையில் கூட கொட்டுவார்களே தவிர தப்பி தவறி கூட பியாங்கிடம் கொடுக்க மாட்டார்கள். எனவே பெரும்பாலான நாட்களில் பியாங் இரவில் சாப்பாடு இல்லாமலேயே தூங்கியிருக்கிறார்.
உடல் எடை
இந்த வீட்டுக்கு வந்த போது பியாங்கின் எடை 39. ஆனால் சரியான உணவு இல்லாததால் உடல் எடை வேகமாக சரிய தொடங்கியுள்ளது. உணவு ஒருபுறம் எனில் மறுபுறம் வேலை. பிரேமாவை பொறுத்த அளவில் பியாங் எப்போதும் வேலை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார். மிகவும் முடியாத நாட்களில் ஓய்வெடுக்கும்போது கூட பியாங்கை பிரேமா தாக்குவார். ஒரு கட்டத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்ததால் கூட தாக்க தொடங்கி தொடங்கயுள்ளார். இந்த தாக்குதல் சில நாட்களுக்கு பிறகு சர்வ சாதாரணமாக தொடர்ந்திருக்கின்றன.
அடி உதை
இதை எதிர்த்து கேள்வி கேட்டால் மேலும் கூடுதல் அடி கிடைக்கும். இதற்கு பிரேமாவின் மகள் காயத்ரியும் துணை. இவரும் சேர்ந்து பியாங்கை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். பியாங் தூங்கும் போது தண்ணீர் ஊற்றுவது, எப்போதுமே அடித்துக்கொண்டே இருப்பது, கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி அடிப்பது என சர்வாதிகாரிகளை போல நடந்துக்கொண்டிருக்கின்றனர். கடைசியாக 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதியன்று இரவு பணிப்பெண் பியாங்கை கடுமையாக தாக்கி வீட்டின் கிரில் கேட்டில் கட்டி வைத்திருக்கின்றனர். பின்னர் அப்பெண்ணின் தலையில் வேகமாக தாக்கியுள்ளனர்.
கைது
இதனையடுத்து அப்பெண் மயக்கமடைந்துள்ளார். இதனை நம்பாத தாயும் மகளும் அங்கிருந்து படுக்கையறைக்கு அப்பெண்ணை இழுத்து வந்து கட்டிலில் போட்டு வயிற்றில் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கட்டிலிலிருந்து கீழை விழுந்த பியாங் அதன் பின்னர் எழுந்திரிக்கவில்லை. உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரை வரவழைத்து பரிசோதித்ததில் பணிப்பெண் உயிரிழந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவர்கள் இருவரும் மறைக்க முயற்சிக்க மருத்துவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சிறை
புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பியாங்கின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் இவர்களின் கொடுமை தாங்காமல்தான் பியாங் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 39 கிலோ எடையுடன் வந்த பியாங் உயிரிழக்கும்போது வெறும் 24 கிலோ மட்டுமே இருந்திருக்கிறார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த மலேசியாவையே உலுக்கிய நிலையில், கைது செய்யப்பட்ட காயத்ரிக்கு கடந்த 2021ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டன. இதனையடுத்து பிரேமாவின் வழக்கு இழுவையிலேயே இருந்து வந்தது. இறுதியாக இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.