இது தான் ரியல் முரட்டு காளை.. போட்டியில் வண்டியே உடைந்த போதும்.. தன்னந்தனியாக சிறப்பான சம்பவம்
சிவகங்கை: சேதமடைந்த வண்டியுடன் , ஜோடி காளையும் பிரிந்த நிலையில், போட்டியில் தன்னந்தனியாக ஓடி வந்த காளை 3-வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது ஒரு காளை. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மாட்டு வண்டி பந்தயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வப்போது கோவில் திருவிழாக்களின் போது மாட்டு வண்டி பந்தயங்கள் வைக்கப்படும். ஊர்மக்களின் உற்சாகக் குரல்களுக்கு நடுவில் திருவிழாவில் விறுவிறுப்பாக மாட்டு வண்டி பந்தையங்கள் நடைபெறும்.

அப்படித்தான் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குருந்தம்பட்டு பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை அன்று (நேற்று) மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 9 ஜோடிகள், கரிச்சான் மாடு பிரிவில் 10 ஜோடிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு பிரிவு பந்தயத்தின்போது, ஒரு மாட்டு வண்டி, மற்ற மாட்டு வண்டிகளை முந்த முயன்றது. அப்போது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி, அதனை ஓட்டி வந்த சாரதி கீழே விழுந்து காயமடைந்தார்.
மேலும் அந்த வண்டியில் இருந்து ஒரு காளை பிரிந்து சென்றுவிட்டது. ஆனாலும், மற்றொரு காளை வண்டியுடன் விடாமல் ஓடியது. இந்த காளை தன்னந்தனியாக எல்லைக் கோட்டை சென்றடைந்து போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அந்த காளையையும், உரிமையாளரையும் அனைவரும் பாராட்டினார்கள். சேதமடைந்த வண்டியுடன் , ஜோடி காளையும் பிரிந்த நிலையில், போட்டியில் தன்னந்தனியாக ஓடி வந்த காளை 3-வது இடத்தை பிடித்த சம்பவம் சிவகங்கை மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications