"வரம்பை மீறும் ஆளுநர்..." அட்டாக் மோடில் கார்த்தி சிதம்பரம்! பிகே திட்டம் குறித்தும் பரபர கருத்து
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழக அரசு- ஆளுநர் விவகாரம், பிகே திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சார் இணைப் பதிவாளர் அலுவலகம் முத்துப்பட்டினம் மற்றும் செஞ்சை பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.
இதற்கிடையே தற்போது காரைக்குடி, ராமேஸ்வரம் சென்னை பைபாஸ் சாலையில் ரூ.2.16 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது.

சிவகங்கை
இந்தக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது தொடர்பாகக் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழக அரசு- ஆளுநர் விவகாரம், பிகே திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து கூறினார்.

துணைவேந்தர் நியமனம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் தான் முழு உரிமை இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எனவே, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதாவை நான் வரவேற்கிறேன். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அனைத்து விவகாரங்களிலும் ஒரே நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

வரம்பை மீறி செயல்படும் ஆளுநர்
சமீப காலமாகவே தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள் வரம்பை மீறியே செயல்பட்டு வருகின்றனர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசின் முடிவுகள் தான் ஜனநாயகத்திற்குச் சிறந்தது. கல்வி என்பது பொது பட்டியலில் தான் இருக்க வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆளுநர் தனிச்சியாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா இல்லை என்பது முக்கியம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சி இரு பொதுத் தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கட்சியின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எனவே, பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ள திட்டங்களைக் காங்கிரஸ் கட்சி அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வரும்" என்றார்.
Recommended Video

பிகே திட்டம்
காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்திக்கும் நிலையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த வாரம் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதற்காக அவர் சில நாட்கள் இடைவெளியில் அவர் காங்கிரஸ் தலைமையை இரு முறை சந்தித்து இருந்தார். 2024ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அதற்கான திட்டத்தையும் பிகே காங்கிரஸ் தலைமையிடம் முன்மொழிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications