முதல்வர் ஸ்டாலினுக்கு 2 ஆப்ஷன் கொடுத்த எச்.ராஜா.. ‘ஒவ்வொரு இந்துவும்’.. ஆ.ராசாவுக்கு எதிராக பிளான்!
சிவகங்கை : ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும்,
இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்வதாக கூற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அழுத்தம் கொடுத்துள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று பேசி இருந்தார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் பற்றி பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆ.ராசா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

எந்த இடத்தில் இருக்கு?
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச்.ராஜா, "இந்து மதத்தினர் குறித்து ஆ.ராசா எம்.பி அவதூறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் பேசியது ஆதாரமில்லாதது. இந்து சமயத்தில் எந்த இடத்தில் அவர் பேசியதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆ.ராசா போன்றவர்கள் திமுகவை அழிப்பது என முடிவெடுத்து செயல்படுகின்றனர்.

தேவையில்லாத வேலை
பாஜக கட்சி அல்லது பிரதமரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை விமர்சனம் செய்யுங்கள். தேசத்தை எதிர்ப்பேன், இந்து மதத்தை எதிர்ப்பேன் என்பது தேவையில்லாதது. ஆ.ராசா தனது சான்றிதழில் இந்து என்று தானே குறிப்பிட்டுள்ளார். இல்லை என்றால் தனி தொகுதியில் நிற்க முடியாது அல்லவா?

2 ஆப்ஷன்
ஆ.ராசா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆ.ராசா பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு கேட்கவில்லை என்பதைப்போல் செய்கை காட்டியுள்ளார். இதனால் அவருக்கு காது கேட்கும் கருவி அனுப்பி வைக்கப்படும். அதனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இந்துவும்
இந்து மத உணர்வுள்ள ஒவ்வொரு இந்துவும் ஆ.ராசா மீது தாமாக முன்வந்து புகார் தர வேண்டும். தமிழகத்தில் குறைந்தது ஐந்தாயிரம் புகாராவது பதியப்பட வேண்டும். ஆ.ராசா மீது 15 நாட்களில் போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்." எனத் தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவோம்
மேலும் பேசிய எச்.ராஜா, திருச்செந்துறை மொத்த கிராமத்தையும் வக்பு வாரியத்தின் சொத்து என்று வக்பு வாரியத் தலைவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறார். வக்பு வாரியத்துக்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications