பாஜக தொண்டர் வீட்டில் சாப்பாடு.. ‘தமிழ் உணவு’.. ராமலிங்கம் மகனை கூப்பிட்டு தலையில் ‘கை’ வைத்த நட்டா!
சிவகங்கை : தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று சாக்கோட்டை பகுதியில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின் வீட்டில் காலை உணவு சாப்பிட்டார்.
நேற்று மதுரைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரைக்குடி சென்ற நட்டா, பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்நிலையில், இன்று காலை உணவை சாக்கோட்டை பகுதி பாஜக நிர்வாகி ராமலிங்கம் என்பவரின் வீட்டில் அருந்தினார். அவருடன் அண்ணாமலை, எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் அங்கு உணவு அருந்தினர்.
கிராமத்தில் கட்சித் தொண்டரின் வீட்டில் உணவு அருந்திய ஜேபி நட்டா, ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரோடு அன்பாக உரையாடியுள்ளார்.

தமிழகத்தில் ஜேபி நட்டா
2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. விமானத்தில் நேற்று மதுரை வந்தடைந்த நட்டா, பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று அங்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களையும், பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடிக்குச் சென்ற நட்டா, அங்கு பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா
மேலும், முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்தினார். பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இரவு என்.ஜி.ஓ காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினார் ஜேபி நட்டா. பொதுக்கூட்டம் முடிந்து இரவில் செட்டிநாடு பேலஸில் தங்கினார்.

பாஜக தொண்டர் வீட்டில் பிரேக்பாஸ்ட்
இன்று காலை 7 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் நட்டா. அங்கு வழிபாடு முடிந்ததும், பாஜக தொண்டர் ஒருவரின் வீட்டில் காலை உணவு அருந்தினார். காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் உள்ள சாக்கோட்டை தெற்கு பாஜக மண்டல் தலைவர் ராமலிங்கம் வீட்டில், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார் நட்டா.

எல்.முருகன் + எச்.ராஜா
மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா உள்ளிட்ட பலரும் நட்டாவோடு அமர்ந்து ராமலிங்கம் வீட்டில் காலை உணவு அருந்தினர். அப்போது ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து அன்பாக உரையாடினார் நட்டா. பின்னர், அவர்களுடன் குழுவாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

கிராமத்தினர் நெகிழ்ச்சி
அங்கிருந்து விடைபெறும் முன்பு, ராமலிங்கத்தின் மகனை அருகே அழைத்து நன்றாகப் படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தியுள்ளார். பாஜக தேசியத் தலைவரே தங்கள் வீட்டுக்கு வந்து உணவருந்திச் சென்றதால் ராமலிங்கம் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்து காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார் நட்டா.

தமிழ் உணர்வு + தமிழர் உணவு
பாஜக நிர்வாகி ராமலிங்கம் வீட்டில் உணவு அருந்தியது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இன்று சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் ராமலிங்கம் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் காலை உணவருந்தினோம். தமிழ் உணர்வுடன், தமிழ் உணவுடன், தமிழரின் இல்லத்தில் உணவருந்தி, தமிழில் பேசக் கேட்டு, மகிழ்ந்த தேசிய தலைவர் நட்டா அவர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications