வைகோவுக்காக 28 ஆண்டுகள் உழைத்தேன்! எல்லாம் வீணாகிவிட்டது! புலவர் செவந்தியப்பன் குமுறல்!
சிவகங்கை: வைகோவுக்காக 28 ஆண்டுகள் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டதாக கூறியிருக்கிறார் புலவர் செவந்தியப்பன்.
மதிமுகவில் சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த புலவர் செவந்தியப்பன் மீது வைகோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தன் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரமில்லை எனக் கூறி அதிர வைத்திருக்கிறார் அவர்.
இதனிடையே இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட சிறப்புத் தகவல் வருமாறு;

28 ஆண்டுகள்
''திமுகவில் 18 ஆண்டுகள் மதிமுகவில் 28 ஆண்டுகள் என மொத்தம் 46 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பவன் நான். வைகோவுக்காக 28 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மதிமுகவில் உழைத்தேன். இன்று அவர் தனது மகனுக்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். என் உழைப்புக்கும், தியாகத்துக்கும் வைகோ கொடுத்த பரிசாக இதை கருதுகிறேன்.''

10 ஆண்டுகளாக
''கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவை மாற்றியமைத்து திடீரென தனக்கு தோதான நபர்களை உள்ளே கொண்டு வந்தார் வைகோ. இப்போது கூட முறைப்படி எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இதனால் என் மீதான ஒழுங்கு நடவடிக்கையே செல்லாது என்பது தான் எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் வைகோவுக்கு என் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை.''

இப்படியொரு பரிசு
''எனக்கு இப்படியொரு பரிசை வைகோ தருவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பொதுவெளியில் கட்சியின் சட்டதிட்டத்தை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த 5-ம் தேதி விளக்கம் கேட்டு வைகோ கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் மீது பதிலளித்து 11-ம் தேதி நான் விளக்கம் கடிதம் அனுப்பினேன். இந்தச் சூழலில் இப்படியொரு அறிவிப்பு வந்திருக்கிறது.''

பழிவாங்கிவிட்டார்
''துரைக்கு எதிராக பேசியதால் என்னை வைகோ பழிவாங்கிவிட்டார். நான் அனுப்பிய விளக்க கடிதம் மீதான விசாரணையே நடத்தாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கட்சியின் சட்டத்திட்டப் படி செல்லாது. அதனால் அவர் என்னை நீக்கியதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு செல்லாத ஒன்று என்று கூறிக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications