எச். ராஜா மீது கடும் அதிருப்தி- சரமாரி புகார்: சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!
சிவகங்கை: பாரதிய ஜனதா கட்சியின் மாஜி தேசிய செயலாளரும் மூத்த தலைவருமான எச். ராஜா மீதான கடுமையான அதிருப்தியால் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரான எச். ராஜா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். உயர்நீதிமன்றத்தை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து மன்னிப்பு கேட்டார்.
வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.. எச் ராஜா குறித்து பிடிஆர்
சர்ச்சை எச். ராஜா
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவின் தாயாரை இழிவுபடுத்தி பேசி கண்டனத்துக்குள்ளானார். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகளே இருக்காது என பேசி கடும் எதிர்ப்புக்குள்ளானார். ஆனாலும் பாஜக மேலிடம் எச். ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் தோல்வி
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச். ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார். தற்போதைய சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியை சந்தித்தார் எச். ராஜா
எச். ராஜாவின் புகார்
இந்த நிலையில் தமது தேர்தல் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என எச். ராஜா விமர்சித்திருந்தார். ஆனால் எச். ராஜாவின் செயல்பாடுகள்தான் தோல்விக்கு காரணம் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். அத்துடன் ஓயவில்லை இந்த பிரச்சனை.
பாஜக நிர்வாகிகள் ராஜினாமா
தற்போது காரைக்குடி, சாக்கோட்டை, கண்ணங்குடி என பல பகுதிகளின் பாஜக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கூண்டோடு கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். தற்போது சிவகங்கை மாவட்ட தலைவர் செல்வராஜும் தாம் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.