சிவகங்கை திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 11 பேர் பலி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி பகுதியில் சமத்துவபுரம் தும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூர் காங்கேயகத்தில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12 பேர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர். 3 பேர் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி பார்வையிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று மாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 11 நபர்கள் இறந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயம்பட்ட நபர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications