ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை.. பதவிக்காக எதையும் செய்வார்.. கொந்தளித்த திருமாவளவன்!
சிவகங்கை: மருது சகோதரர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டி கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும், அவர் பதவிக்காக காட்டிக் கொடுப்பவர் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தொல் திருமாவளவன், மாமன்னர் மருது சகோதரர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி. மருது சகோதரர்கள், ஆங்கிலேயரை எதிர்ப்பவர்களுடன் கூட்டு வைத்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்றனர்.

தனித்துவம் என்பது வேறு
அதேபோல பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டு பலம் தான் வலிமையானது. தேர்தலில் தனியாக தான் நிற்பேன் என்பவர்கள் அரிச்சுவடி அரசியல்வாதிகள். தனித்துவம் என்பது வேறு, தனிமைப்படுவது என்பது வேறு. தனித்துவத்தை பாதுகாக்கவேண்டும் தனிமைப்பட்டு விடக்கூடாது, கூட்டு பலம் என்பது வலிமையிலும் வலிமையானது.

இரட்டை இலை, இரட்டை தலை
இரட்டை இலை தற்போது இரட்டைத் தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்ததால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. அதிமுக, திமுக போட்டியில் பாஜகவால் நுழைய முடியவில்லை. ஆனால் தற்போது ஜெயலலிதா இறந்த பிறகு நுழைந்து விட்டார்கள்.

அண்ணாமலை மீது விமர்சனம்
தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என்ற நிலையில் அதிமுக உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக உள்ளே நுழைந்து விட்டது. தற்போது தமிழ்நாட்டில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பு வேடிக்கை அரசியலை அரங்கேற்றி கொண்டிருக்கிறது. மருது சகோதரர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டி கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை. அவர் பதவிக்காக காட்டிக் கொடுப்பவர் என்று விமர்சித்தார்.

ராமதாஸை வாயடைக்க வைத்த விசிக
தொடர்ந்து, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடியவர்கள் பட்டியலின மக்கள் தான். அவர்களை வளைத்து போட பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு எஃகு கோட்டை. அதை யார் நினைத்தாலும் அசைக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை பஞ்சு மிட்டாய் இயக்கம் என்று விமர்சித்த ராமதாஸை வாயடைக்க செய்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications