2 லட்சமா.. மனுஷங்களா நீங்க.. 5 நிமிடங்களில் முடிந்த CSK vs MI டிக்கெட் விற்பனை.. ரசிகர்கள் விரக்தி!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் சென்று பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியின் பக்கத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வரிசையில் இருந்ததால், ரசிகர்கள் பலரும் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதன்பின் மார்ச் 23ஆம் தேதி நடக்கும் இரவு போட்டியில் நட்சத்திர அணிகளான சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மெகா ஏலத்திற்கு பின் இரு அணிகளும் முதல்முறையாக ஆடவிருப்பதால், இரு அணிகளின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2012ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணி இதுவரை ஒருமுறை கூட அந்த அணி ஆடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இதனால் இம்முறையாவது வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் முதல் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பும்ராவும் காயம் காரணமாக விலகி இருப்பதால், மும்பை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது.
இம்முறை ஐபிஎல் டிக்கெட் விற்பனை மொத்தமாக ஆன்லைன் வாயிலாக செய்யப்படுகிறது. சிஎஸ்கே அணி விளையாடும் டிக்கெட்டுகள் விற்பனை www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் செய்யப்பட்டது. இந்த விற்பனை க்யூ அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான குறைந்த டிக்கெட் விலையாக ரூ.1,700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தமாக 38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை அதிகபட்சமாகவே 20 ஆயிரம் வரைக்கும் நடக்கும். மற்ற அனைத்தும் ஸ்பான்சர்கள், சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள், டிஎன்சிஏ, பிசிசிஐ, அணி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும்.
இந்த நிலையில் இன்று காலை டிக்கெட் விற்பனை தொடங்கிய போதே சுமார் 2 லட்சம் ரசிகர்கள் வரிசையில் இருந்தனர். சாதாரணமாக டிக்கெட் வாங்கும் லிங்கை திறந்தால் 10 நிமிடங்களுக்கு டிக்கெட் வாங்கப்பட வேண்டும். அப்படி வாங்கப்படாத பட்சத்தில் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டும். இதனால் வழக்கம் போல் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கம் போல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுவிட்டதாகவும், அதிக தொகைக்காக இதுபோன்ற செயல்களில் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் சில ரசிகர்கள் பணம் செலுத்தி முன்பதிவு செய்து வரிசையில் இருந்து டிக்கெட்டுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications