பறக்கும் எறும்புகள்! மைதானத்திற்குள் வந்த கார்! லக்னோ மாதிரி விநோத காரணங்களால் ரத்தான போட்டிகள்
டெல்லி: லக்னோவில் நேற்று நடக்கவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா நான்காவது டி20 போட்டி, கடும் பனிமூட்டம் என்று காரணம் சொல்லி ரத்து செய்யப்பட்டது. மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்ட டாஸ், இரவு 9:25 மணி வரை நடுவர்கள் பலமுறை ஆய்வு செய்தும் வானிலையில் தெளிவு இல்லாததால், மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு போட்டி கைவிடப்பட்டது. பனிமூட்டத்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டி ரத்தானது அரிது. ஆனால் இதை பனிமூட்டம் இல்லை, புகை மூட்டம், மாசு என்று அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளது வேறு கதை.
பனிமூட்டம் மட்டுமல்ல, கிரிக்கெட் வரலாற்றில் பல விசித்திரமான காரணங்களாலும் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆடுகளத்தில் கார் நுழைந்தது, பறக்கும் எறும்புகள், தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டது.. எனச் சில சுவாரஸ்ய சம்பவங்களை இப்போது பார்ப்போம்.

சூரிய ஒளி கிரிக்கெட் போட்டிகளை பலமுறை பாதித்துள்ளது. 2019-இல் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேப்பியரில் உள்ள மேக்லீன் பார்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சூரிய ஒளி பேட்ஸ்மேன்களின் கண்களை நேரடியாகப் பாதித்ததால், ஆட்டம் அரை மணி நேரம் தாமதப்பட்டது.
பறக்கும் எறும்புகள் மைதானத்திற்குள் நுழைந்ததாலும், போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செஞ்சூரியனில் நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டியின்போது, மைதானத்தில் திரளாகப் பறந்த எறும்புகள் காரணமாக, ஆட்டம் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

டெல்லி – உத்தரப் பிரதேசம் ரஞ்சி டிராபி போட்டியின்போது, ஒரு நபர் காரை ஓட்டிக்கொண்டு நேராக ஆடுகளத்திற்குள் வந்துவிட்டார். வீரர்கள் மற்றும் நடுவர்கள் தடுத்தும், அவர் பிட்ச் மீது காரை செலுத்த முயன்றார். இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த போட்டியில் விளையாடினார்.
தேவையற்ற அலாரங்களாலும் போட்டிகள் நின்றுள்ளன. ஜனவரி 2017-இல் நாதன் லயன் டோஸ்ட் கருகியதால் தீயணைப்பு அலாரம் ஒலித்து, தீயணைப்புப் படையினர் வந்தனர். 2007 கவுண்டி சாம்பியன்ஷிப்பில் கிரேவி கருகிய புகையால் இதேபோல் அலாரம் ஒலித்து, மைதானம் காலி செய்யப்பட்டது.

2017-இல் ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா – இலங்கை ஒருநாள் போட்டியின்போது, தேனீக்கள் மைதானத்தைச் சூழ்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டத்தை நிறுத்தின. மேலும், இலங்கையில் பலமுறை பாம்புகள் நுழைந்து ஆட்டத்தை நிறுத்தி உள்ளன. நாய்கள் மற்றும் பிற விலங்குகளும் தடை ஏற்படுத்தலாம்.
சப்-பிட்சில் பந்து புதையுண்டதால் ஒரு போட்டி ரத்துசெய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த ஆண்டு மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் இது நிகழ்ந்தது. ஹோபார்ட் ஹரிகேன்ஸ் -அடிலேய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டி இடைவேளையின்போது, பந்து பிட்சிற்குள் நுழைந்து ஒரு பள்ளத்தை ஏற்படுத்தியதால், போட்டி ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications