ED அதிரடி.. யுவராஜ் சிங் - ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. பின்னணி இதுதான்
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சட்டவிரோதமாக சூதாட்ட செயலிகளை புரோமோஷன் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்தடுத்து சினிமா நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது.
இதில் ராபின் உத்தப்பா கர்நாடாகாவை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான இவர் ஐபிஎல்லில் மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்பட பல அணிகளுக்கு விளையாடி உள்ளார். வரும் 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர் 1xBet என்ற சூதாட்ட செயலியை புரோமோஷன் செய்த நிலையில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், யுவராஜ் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர். ஐபிஎல்லில் பஞ்சாப், மும்பை, புனே உள்பட பல அணிகளுக்கு விளையாடியானர். யுவராஜ் சிங்கை செப்டம்பர் 23ம் தேதி விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்பட பல கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதேபோல் நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக சூதாட்ட செயலிகள் செயல்பாட்டில் இருந்தன. அப்போது சில செயலியின் நிர்வாகங்கள் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த அதன்மூலமாக பிரபலங்களை வைத்து புரோமோஷன் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளை புரோமோஷன் செய்த பிரபலங்கள் சம்மன் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த முறை யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த சம்மன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications