மீண்டும் தேர்வு செய்யப்படாத முகமது ஷமி.. அஜித் அகர்கர் செய்யும் தவறான அரசியல்.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய ஒருநாள் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் ஓரங்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போதும், முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை நடக்க உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார். பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நம்பர் 4 வரிசையில் பேட்டிங் ஆடுவதற்கு ரிஷப் பண்ட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி என்று 3 ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இதனிடையே சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். ஆனால் மற்றொரு சீனியர் வீரரான முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படவே இல்லை. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் முகமது ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் இன்னும் ஃபிட்னஸை நிரூபிக்கவில்லை என்று அஜித் அகர்கர் பதில் அளித்தார். ஆனால் அடுத்த ரஞ்சிப் போட்டியிலேயே முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டார்.
அதன்பின் தாம் ஃபிட்னஸ் உடன் இருப்பதாகவும் அஜித் அகர்கருக்கு பதில் அளித்தார். ரஞ்சி டிராபியில் 4 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்ததாக சையத் முஷ்டாக் அலி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட தேர்வாகி இருக்கிறார். ஆனாலும் முகமது ஷமியை இந்திய அணியின் தேர்வுக் குழு புறக்கணித்திருக்கிறது.
35 வயதாகும் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன் என்பதற்கு தேர்வுக் குழு உரிய விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஒருவேளை இளம் வீரர்களை தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பினால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் பிசிசிஐ நிர்வாகம் முகமது ஷமிக்கு எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications