உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி.. அகமதாபாத்தில் ’மேட்ச்’ பார்க்கும் ஆஸ்திரேலியா துணை பிரதமர்!
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியை ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் பார்வையிட உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், இன்றும் நாளையும் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். ஆஸ்திரேலிய அமைச்சர் மார்லஸ் மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையே 2 + 2 அடிப்படையில் அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் 2+2 பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். இருநாடுகளுக்கிடையே முதலாவது 2+2 அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை 2021, செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விரிவான உத்திப்பூர்வமான கூட்டாண்மையைப் பின்பற்றுகின்றன, அமைச்சர் மார்லஸின் வருகை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2+2 பேச்சுவார்த்தை மற்றும் இருதரப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பின் போது இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியையும் அமைச்சர் மார்லஸ் பார்வையிடுகிறார்.












Click it and Unblock the Notifications