கடைசியில் போட்டிக்கு போக முடியல.. டிக்கெட் வாங்கிக்கோங்க.. பேஸ்புக்கில் யாராவது கேட்டா வாங்காதீங்க
லக்னோ: உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் தான் கடைசி நேரத்தில் போட்டிக்கு போக முடியவில்லை என டிக்கெட்டை வாங்கி கொள்ளுங்கள் என பேஸ்புக், எக்ஸ் தளத்தில் கூறினால் அதனை வாங்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தி உள்ளது.

அதேபோல் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலககோப்பை தொடர் என்பது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்று 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 9 வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி நடப்பு உலககோப்பை தொடரில் வங்கதேசத்தை மட்டுமே வீழ்த்தி உள்ளது. மாறாக நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.
இத்தகைய சூழலில் தான் நாளை இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ள நினைக்கிறது. இந்த போட்டியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முயற்சிக்கும் அதேவேளையில் தொடர் வெற்றியை கொண்டாட இந்தியாவும் முனைப்பு காட்டும். இதனால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த போட்டி என்பது நாளை மதியம் 2 மணிக்கு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் நாளை நடக்கும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியையொட்டி போலியான டிக்கெட்டுகள் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து ஏமாற்றும் வேலையை ஒரு கும்பல் செய்து வருகிறது. தங்களின் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் உள்ளது. கடைசி நேரத்தில் நண்பர் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த டிக்கெட்டை பெற விரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளலாம் என பலர் தங்களின் செல்போன் எண்ணை வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த எண்களை தொடர்பு கொண்டு பேசும்போது அவர்கள் மோசடிக்காரர்கள் என்பது உறுதியாகி உள்ளது. அதாவது தங்களிடம் டிக்கெட் இருப்பதாகவும், கடைசி நேரத்தில் போட்டிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அதனை விற்பனை செய்வதாகவும் கூறும் நபர் முதலில் டிக்கெட்டுக்கான குறிப்பிட்ட தொகையை ஜி-பே மூலம் அனுப்ப கூறுகிறார். அதன்பிறகு மீதமுள்ள தொகையை நாளை போட்டி நடக்கும்போது மைதானத்தில் வாசலில் அவரை சந்தித்து கொடுத்து விட்டு டிக்கெட்டை பெற்று கொள்ளும்படி கூறி ஏமாற்ற தொடங்கி உள்ளனர்.
மேலும் இன்னொரு முறையிலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதாவது, கிளப் கிரிக்கெட் விளையாடி வரும் நிஷாந்த் சிங் என்பவர், ‛‛உலகக் கோப்பை போட்டி டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. ஐசிசி கவுன்ட்டருக்கு பதில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி இணையதளம் மூலம் கும்பல் மோசடி செய்கிறது'' என தெரிவித்துள்ளார்.
மேலும் பலரும் உண்மையான டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு இணையதளங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கடைசி நேரத்தில் மேட்ச் பார்க்க செல்ல முடியவில்லை. இணையதளத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என யாரும் கூறினால் ரசிகர்கள் அதனை வாங்கி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications