எதே அர்ஜுன் டெண்டுல்கரா.. அந்த தப்பை பண்ணாதீங்க சூர்யகுமார்.. பும்ராவுக்கு மாற்றாக விளையாடுவது யார்?
சென்னை: ஐபிஎல் தொடரின் 2வது நாள் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், அவரது இடத்தில் எந்த பவுலர் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் எல் கிளாசிக்கோ என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் போட்டியாக சிஎஸ்கே - மும்பை இடையிலான ஆட்டம் இருந்து வருகிறது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போட்டிகளில் கடைசி பந்து வரை பரபரப்பு உச்சத்தில் இருக்கும் என்பதால், இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும்.

இந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதி நடக்கும் இரவு போட்டியில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்காக ஏற்கனவே மும்பை அணி சென்னை வந்துவிட்டது. அதேபோல் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இருந்தால், அந்த போட்டியில் மும்பை அணியின் கைகளே ஓங்கி இருக்கும். ஏனென்றால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மும்பை அணி பக்கம் திருப்பக் கூடியவர். ஆனால் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் பும்ரா பவுலிங் பயிற்சியையே தொடங்கவில்லை என்பதால், அவர் மே மாதமே மும்பை அணிக்கு களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு பதிலாக எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மும்பை அணியின் பேக் அப் வீரர்கள் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். மும்பை அணியின் பேக் அப் வீரர்களாக அர்ஜுன் டெண்டுல்கர், அஸ்வனி குமார், சத்யநாராயணா, ரீஸ் டாப்லீ ஆகியோர் வாங்கப்பட்டுள்ளனர். இதில் வில் ஹாக்ஸ், போல்ட், சான்ட்னர், முஜீப் உர் ரஹ்மான் ஆகிய 4 பேரும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளது.
இதனால் மீதமுள்ள இந்திய வீரர்களே பும்ராவுக்கு பேக் அப்பாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதன்படி பார்த்தால் அர்ஜுன் டெண்டுல்கர், அஸ்வனி குமார், சத்யநாராயணா ஆகியோரில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் மும்பை ரசிகர்கள் தரப்பில் அஸ்வனி குமார், சத்யநாராயணா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் பயிற்சியாளர் ஜெயவர்தனே, கேப்டன் சூர்யகுமார் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications