சிஎஸ்கே அணியின் பவுலிங் மட்டுமல்ல.. பேட்டிங்கும் டம்மிதான்.. ஹாட்ரிக் சொதப்பலை செய்த சஞ்சு சாம்சன்!
பெங்களூர்: சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய 3 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஹாட்ரிக் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்காக 3 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 25 பந்துகளில் 8 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 70 ரன்களை குவித்தார். தேவ்தத் படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் சிஎஸ்கே அணிக்கு இமாலய இலக்கு முடிவானது. இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்களில் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது. ஆனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 1 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். சஞ்சு சாம்சனின் ஹாட்ரிக் சொதப்பலான இன்னிங்ஸாக இது அமைந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தார். ஆனால் சிஎஸ்கே அணிக்காக முதல் 3 இன்னிங்ஸிலும் சஞ்சு சாம்சன் 7, 6 மற்றும் 9 ஆகிய ரன்களை சேர்த்திருப்பது ரசிகர்களிடையே புலம்பலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்காக ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்தோம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமாக முதல் 2 ஓவர்கள் அமைதியாக ஆடும் வழக்கம் கொண்ட சஞ்சு சாம்சன், இந்த சீசனில் கொஞ்சம் கூட நிதானமாக காணப்படவில்லை. புதிய அணி, புதிய சூழல் என்பதால் சஞ்சு சாம்சன் நிதானமாக இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இதனால் சஞ்சு சாம்சனுக்கு போதுமான நம்பிக்கையை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிராக டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் சிஎஸ்கே அணி எளிதாக 200 ரன்களை கடந்திருப்பது ரசிகர்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications