ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து டக்ளஸ் தேவானந்தா கடிதம்
யாழ்ப்பாணம்: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு இலங்கையின் ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம்:
உங்கள் மீது ஜோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீங்கள் விடுதலையாகி வந்திருப்பது குறித்து தமிழகமெங்கும் பெரு மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இந்த மகிழ்ச்சி தனியே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. உங்களது விடுதலையால் தமிழக மக்களை போல் இலங்கைத் தமிழ் மக்களின் மனங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன.
உண்மைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. இந்த உயிருள்ள தத்துவத்தை உங்களது விடுதலை உலகத்தின் செவிகளுக்கு மறுபடி ஒரு முறை உரக்க சொல்லியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் உங்களது நேரடி பிரசன்னம் சில காலங்கள் இல்லையென்றாலும் தமிழக மக்களின் மனங்களை நீங்களே தொடர்ந்தும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறீர்கள்.
அது போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கிறீர்கள். மீண்டும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் நீங்களே நேரில் உட்கார்ந்து, உங்களது நல்லாட்சியை தொடர மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீங்கள் எழுப்பி வந்த உரிமைக்குரல் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications