விடுதலைப் புலி நெடியவனுக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸ்! நார்வேயில் தேடுதல் தீவிரம்!!
ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பிரிவு தலைவராக கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்ற நெடியவனை தேடுவது தொடர்பாக இண்டர்போல் போலீசார் நோட்டீஸ் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து நெடியவன் தங்கியிருப்பதாகக் கூறப்படும் நார்வேயில் அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார் நெடியவன் என்பது இலங்கை அரசின் குற்றச்சாட்டு. இதனாலேயே நெடியவனுடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகிய போராளிகளை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் ஏராளமான தமிழர்களை தொடர்ந்து இலங்கை அரசு கைது செய்து வருகிறது,
இந்த நிலையில் நெடியவனை கைது செய்வதற்காக இண்டர்போல் போலீசாரிடம் இலங்கை முறையீடு செய்திருந்தது. இதை ஏற்று இண்டர்போல் போலீஸாரும் நெடியவனை தேடுவதற்கான நோட்டீஸ் வெளியிட்டனர். இது இண்டர்போல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நார்வேயில் தங்கியிருந்த நெடியவன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நார்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்களில் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது.