யாழ். மேயர் மணிவண்ணன் திடீர் கைது!விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என வழக்கு!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈழத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை சார்பாக அண்மையில் பொதுமக்களிடம் அபராதத் தொகை வசூலிக்க ஒரு காவல் படை உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர், வெற்றிலை எச்சில் உமிழ்வோரிடம் அபராதம் விதிக்கும் பணியை இந்த குழு செய்து வந்தது.

ஆனால் இந்த குழுவினருக்கு வழங்கப்பட்ட சீருடையால் பெரிய சர்ச்சை வெடித்தது. இந்த குழுவினர் பயன்படுத்திய சீருடையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையைப் போன்றதாக இருக்கிறது என போலீசார் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து அபராதம் வசூலிக்கும் குழுவின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இருந்த போதும் இலங்கை போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை நேற்று இரவு விசாரணைக்கு அழைத்து சென்றனர் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார். அவரிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை மணிவண்ணனை கைது செய்ததாக இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணன் கைது சம்பவமானது ஈழத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் மணிவண்ணன் கைது சம்பவத்துக்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications