கும்புடறேன் சாமி... புதிய கட்சி தொடங்குகிறார் மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அவரது சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் மைத்ரிபால சிறிசேன போட்டியிட்டு வென்றார். இதன் பின்னர் சுதந்திர கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்து வருகின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி- சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசை அமைத்துள்ளது. மகிந்த ராஜபக்சே வெறும் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் உள்ள மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் புதிய கட்சியைத் தொடங்குமாறு வலியுறுத்தி வந்தனர். இதன் ஒருபகுதியாக மீரிஹானவில் ராஜபக்சேவின் இல்லத்தில் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய கட்சியைத் தொடங்குவது என்றும் அதற்கு ராஜபக்சேவை தலைவராக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.