புலிகள் 'போனதுக்கப்புறம்', தமிழர்களெல்லாம் மகிழ்ச்சியா இருக்காங்க.. சொல்கிறார் ராஜபக்சே!
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில், அப்பாவி பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப் பட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், ராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியுள்ளனர்.
இதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர் பகுதியில் ராணுவம் குறைக்கப் பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :-
விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட பின், வடக்கு பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். சர்வதேச அளவில் சிலர் கண்டனம் செய்தாலும், இலங்கையில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் இல்லாததால், தற்போது, மக்களால் நாட்டின் எந்த ஒரு இடத்துக்கும், பயம் இல்லாமல் செல்ல முடிகிறது. வடக்கு மாகாணத்தில், முன்பு, 70 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை, 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.