ஈழத்தில் ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறை: மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம்!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் மகிந்த ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறைகள் தொடருகின்றன என்று இந்திய பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் அடிப்படையான மாற்றங்களை இலங்கை அரசாங்கம் செய்கிறது.
இந்த நிலைமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்திய மத்திய அரசு இந்த விஷயத்தில் முக்கிய கவனம் தெலுத்தவேண்டும்.
உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை எமக்கு விரைவாக வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம்.
இவ்வாறு இரா. சம்பந்தன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.