கொழும்பில் மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்தார் பிரதமர் மோடி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்துப் பேசினார்.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நேரில் சந்தித்தார். மோடியை, ராஜபக்சே பாராட்டிய சில நாட்களிலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாள் இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் ராஜபக்சேவை சந்திப்பது திட்டமிடப்படவில்லை. ஆனாலும் முன்னாள் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அண்மையில் அளித்தப் பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டிப் பேசியதோடு, தன்னை மோடி மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
மோடியை ராஜபக்சே பாராட்டிய சில நாட்களிலேயே மோடி - ராஜபக்சே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.