இலங்கை பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசி ஈர்த்த மோடி.. புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என உறுதி
மலையக மக்களின் கல்வி, சமூக ,பொருளாதார வளர்ச்சிக்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கும் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கண்டி : இலங்கை பயணத்தின் போது மலையகத்தில் இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட டிக்கோயா கிளங்கன் தள மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்டோரை சந்தித்து பேசியதோடு, புத்த மத கோவில்களுக்கும் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இதனையடுத்து நுவரெலியாவிற்கு இந்தியப் பிரதமர் வருகை தந்ததையொட்டி விழா நடைபெற்ற இடத்தில் ஏராளமான மலையகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து மோடியின் உரையை கேட்க ஆவலோடு காத்திருந்தனர். இலங்கைத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மலையகத்தில் உள்ள நோர்வூட் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
முன்னதாக மலையகத்தமிழர்களுக்காக இந்திய அரசின் உதவியோடு கட்டப்பட்ட டிக்கோயா கிளங்கன் தள மருத்துவமனையை திறந்து வைத்து அங்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை அதிபர் சிறிசேனா உள்ளிட்டோருடன் சென்று பார்வையிட்டார்.
10 ஆயிரம் வீடுகள்
அப்போது விழாவில் பேசிய நரேந்தர மோடி, தற்போது மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை கொண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கான நிலத்தை இலங்கை அரசு உறுதி செய்துள்ள செய்தியை அறிந்து மகிழ்வதாகவும், மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
ஆம்புலன்ஸ் சேவை
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 1990 அம்யூலன்ஸ்கள் தற்போது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழில் பேச்சு
மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி டுவிட்டரில் தமிழில் கருத்து தெரிவித்தது போலவே மேடைப்பேச்சின் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே" என்ற வரிகளை குறிப்பிட்டு பேசியதற்கு தமிழர்கள் மத்தியில் கைதட்டல்கள் எழுந்தது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, முன்னேற்றத்திற்காக இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பயிற்சிக் கூடங்கள்
1947ம் ஆண்டு இலங்கை தோட்டத் தொழிலாளர் நிதியம் துவக்கப்பட்டது முதல் மக்களின் மேம்பாட்டிற்காக இந்தியா உதவி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் 700 புலமைப்பரிசில்களை வழங்கப்பட்டு வருவதாகவும், தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான கூடங்கள் ஆசிரியர் பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.