விதிகளை மீறி, கோர்ட்டை மிரட்டி முன்கூட்டியே 3வது முறை போட்டியிட்டு முழுகிப் போன ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு ஒருவர் தொடர்ந்து 2 தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அதை மீறி தேர்தலில் போட்டியிட்டவர் ராஜபக்சே. இதற்காக இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியையும் ராஜபக்சே தரப்பு மிரட்டி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூற வைத்ததாகவும் அப்போது சர்ச்சை எழுந்தது. மேலும் 2வது முறை செய்தது போல, 3வது முறையாகவும், முன்கூட்டியிட்டார் ராஜபக்சே. எல்லாம் செய்தும் கூட படு தோல்வியைத் தழுவியுள்ளார்.
2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே தமிழர் பகுதிகளைக் குறி வைத்து தனது தாக்குதலை ஆரம்பித்தார் ராஜபக்சே பன்னாட்டு துணையுடன், விடுதலைப் புலிகளை அடக்கினார். தமிழர் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இந்தப் படுகொலையை உலகமே அமைதியாக வேடிக்கை தான் பார்த்தது.
அதன் பின்னர் இந்த வெற்றியைக் காரணமாக வைத்து அதில் குளிர் காய நினைத்து பதவி முடிய ஒரு வருடம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் ராஜபக்சே 2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தனது தளபதியாக செயல்பட்டவரான சரத் பொன்சேகாவே எதிர்த்துப் போட்டியிட்டார். இருப்பினும் அப்போது சிங்களர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு முழுமையாக இருந்ததாலும், பொன்சேகாவை துரோகி போல சித்தரித்ததாலும் ராஜபக்சே வென்றார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்த சட்டத்தை மீற முடிவு செய்தார் ராஜபக்சே. அதன்படி டெக்னிக்கலாக ஏமாற்றும் வகையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார். அதாவது பதவியை முழுமையாக முடிக்காமல், 2 ஆண்டு பதவிக்காலம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் அவர்.
இதை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியையே ராஜபக்சே கும்பல் மிரட்டியதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. இதனால் ராஜபக்சே மீண்டும் போட்டியிடலாம் என்று சுப்ரீ்ம் கோர்ட் கூறி விட்டது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்டார் ராஜபக்சே.
ஆனாலும் அவர் போட்ட திட்டங்களையெல்லாம் தமிழர்கள் தங்களது வாக்குகளால் தவிடுபொடியாக்கி விட்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக மைத்ரிபாலாவுக்கு ஆதரவாக சிங்களர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் திரண்டதே ராஜபக்சேவின் கதையை முடிக்க முக்கியக் காரணமாகி விட்டது.