இந்திய - இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேச வேண்டும்! - சல்மான் குர்ஷித்
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்பு, முதல் முறையாக இலங்கைக்கு அரசுமுறையாக சல்மான் குர்ஷித் பயணம் செய்துள்ளார்.
அவரை, இலங்கையின் சமூக சேவைத்துறை அமைச்சர் பெலிக்ஸ் பெரேரா, இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் திங்கள்கிழமை வரவேற்றனர்.
இதையடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸை அவரது அலுவலகத்தில் சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, சல்மான் குர்ஷித் கூறியது:
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களே சிறந்த தீர்வுகாண வேண்டும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வழிவகை செய்யப்படும். மீனவர் பிரச்னையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறந்த எதிர்காலம்
இலங்கை மாகாணத் தேர்தல் முடிவுகளின் மூலம் வடக்கு மாகாண மக்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கியுள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும் வாழ விரைவில் அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் செய்ய வேண்டும்.
இலங்கையின் 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் கால நிர்ணயம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
இதற்கான கால நிர்ணயம் எதையும் இந்தியா நிர்ணயிக்கவில்லை. எந்தவகையான தீர்வு காண வேண்டும் என்பதை இலங்கை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும்," என்றார்.