டெய்லி போலீஸ் ஸ்டேஷன் படியேறும் இலங்கை வீரர் குணதிலக! பலாத்கார வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பலாத்கார வழக்கில் கைதான தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு இணையாக இதில் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக எதிரான பாலியல் புகார் பரபரப்பைக் கிளப்பியது. ஆஸ்திரேலியாவில் வைத்து அவர் கைதானார்.

பலாத்கார புகார்
டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி அரையிறுதிக்குக் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் தனுஷ்க குணதிலக செய்த செயல் உலகக் கோப்பை தோல்வியைத் தாண்டி இலங்கை நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் 29 வயதான இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.

என்ன நடந்தது
டேட்டிங் செயலி ஒன்றின் மூலமே இருவருக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. முதலில் சிட்னியில் இருக்கும் பாரில் இருவரும் சந்தித்துப் பேசிய நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளுமாறு தனுஷ்க குணதிலகவிடம் அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது
அது மட்டுமின்றி, அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி குணதிலகா பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய இலங்கை அணி தாயகம் திரும்பத் தயாரான போது, இந்த புகார் வந்தது. குணதிலகவை போலீசார் கைது செய்த நிலையில், மற்ற வீரர்கள் மட்டும் தாயகம் திரும்பினர். ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்ட குணதிலக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணை
இம்மாத தொடக்கத்தில் இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று மீண்டும் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் குணதிலகாவுக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு இருப்பதாகவும் ஜாமீன் விதிமுறைகளை மீறினால், நிச்சயமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

ஜாமீன்
முதலில் இதை ஏற்க மறுத்தாலும், பின்னர் ஆஸ்திரேலிய போலீசார் இந்த புதிய ஜாமீன் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து குணதிலகவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள போதிலும், ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

கட்டுப்பாடுகள்
ஜாமீன் தொகையாக 150,000 ஆஸ்திரேலிய டாலர்களை அவர் செலுத்த வேண்டும். மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளை அவர் பயன்படுத்தக் கூடாது. பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய போலீசாரிடம் கொடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எங்கும் செல்லக் கூடாது. தினமும் இரண்டு முறை போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும். புகார் அளித்த பெண்ணை எந்த வழியிலும் தொடர்பு கொள்ளக் கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications