புதுக்கோட்டை அருகே பைக்கில் கடத்தி சென்ற 10 கிலோ தங்கம் பறிமுதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பைக் மூலமாக கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள, 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே இன்று சுங்க துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் வந்த இரண்டுபேர் திருதிருவென முழிப்பதை பார்த்து சந்தேகமடைந்த சுங்கத்துறையினர், அவர்களை சோதனை போட்டனர். அப்போது கை பையில் 10 கிலோ தங்கத்தை இருவரும் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி.
இந்த தங்கத்துக்கான ஆவணங்கள் இருவரிடமுமே இல்லை. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இருப்பினும் பிற விவரங்களை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் நான்கு முறை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை பஸ்களில் கொண்டு செல்லப்பட்டபோது சிக்கியவை. இம்முறை இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாகன தணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.