கூடங்குளம் அணு உலைக்கு அருகே மீண்டும் 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு அருகேயுள்ள கிராமத்தில் மீண்டும் 12 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணு உலைக்கு அருகே உள்ளது கூத்தங்குழி கிராமம். அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் உள்ள ஊர் என்பதால் இந்த கிராமத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்த சிலர் இடிந்தகரையில் உள்ள சுனாமி காலனியில் தங்கியிருந்தபடி, நாட்டு வெடிகுண்டுகளை திருட்டுத்தனமாக தயாரிக்க முனயன்றபோது குண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் இறந்தனர். இதையடுத்து கூத்தங்குழியை சேர்ந்தோர் சுனாமி காலனியில் தங்கி இருக்க கூடாது என அறிவித்து அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கூத்தங்குழி ஊருக்கு மேற்கே உள்ள காட்டு பகுதியில் மரத்தின் அடியில் பிளாஸ்டிக் வாளியில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் நெல்லையில் இருந்து கூத்தங்குழிக்கு வரவழைக்கப்பட்டனர். டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் இக்குழுவினர் காட்டு பகுதிக்கு சென்று பிளாஸ்டிக் வாளியில் இருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்து செயலிழக்க செய்தனர்.
மீனவ மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக வெடிகுண்டுகளை தயாரிப்பது நீண்ட காலமாக இப்பகுதியில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். கூடங்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி, இந்த வெடிகுண்டு தயாரிப்புக்கு கடிவாளம்போட போலீசார் களமிறங்கியுள்ளனர்.