13 வயது சிறுமியை விடாமல் துரத்திய 60 வயது பைக் ரோமியோ கைது..!
13 வயது சிறுமியை தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஆவடி: 13 வயது சிறுமியை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்த 60 வயது ரோமியோ ஒருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து புழலுக்கே அனுப்பி வைத்துவிட்டனர்.
திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் பள்ளி சென்ற சிறுமியை 60 வயதுடைய இந்த முதியவர் வழிமறித்து தன்னுடன் வரும்படியும், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் பணமும் தருவதாக கூறியுள்ளார். இதனால் பயந்த அந்த சிறுமி அங்கிருந்து ஓடிபோய்விட்டாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அன்று காலை நடந்த விஷயத்தை தன் பெற்றோரிடம் சொன்னாள்.

அடையாளம் சொன்ன சிறுமி
மேலும் அந்த முதியவர் எப்படி இருப்பார் என்றும் கூறவே, பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியுடன் மறுநாள் பள்ளிக்கு கூடவே வந்து சென்றனர். அப்போது அந்த முதியவர் வரவில்லை. மகள் சொன்ன அடையாளத்தை வைத்து தேடினார்கள், அப்போதும் அந்த முதியவர் கிடைக்கவில்லை. சரி பிரச்சினை இல்லையே என்று நினைத்து பெற்றோர்கள் இதனை விட்டுவிட்டார்கள்.

ரூ.5 ஆயிரம் தருகிறேன்
இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி, மீண்டும் பள்ளி அருகே வந்து பைக்கில் ஆஜரானார் அதே ஆசாமி. மீண்டும் அதே பழைய பல்லவிதான், "என்னுடன் வா, உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன்". அப்போதும் சிறுமி ஓட்டம்தான். ஆனால் இந்த முறை அவள் தனது வீட்டில் இதனை பயம் காரணமாக சொல்லாமல் விட்டுவிட்டாள். மீண்டும் நேற்று காலை அதே ஆசாமி. ஆனால் இப்போது இடம் பள்ளி இல்லை. சிறுமி வீட்டின் தெருவுக்கே வந்துவிட்டார். பள்ளி முடிந்து திரும்பிய சிறுமியிடம் அதே போல் 5 ஆயிரம் ரூபாய் கதையை எடுத்தார். இதனால் பீதி அதிகமான சிறுமி, பெற்றோரிடம் வந்து அழுதுகொண்டே சொன்னாள்.

சுற்றிவளைத்தனர்
இதையடுத்து பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையானார்கள். இந்த முறை எப்படியாவது அந்த ஆசாமியை பிடித்து விட வேண்டும் என முடிவு கட்டினார்கள். மாலை பள்ளி வாசலின் அருகே போய் மறைந்து நின்றுகொண்டார்கள். அங்கே பைக்கில் வந்து நடந்து வந்த சிறுமியை வழியில் மறித்து பேச ஆரம்பித்தார். இப்போது வசமாக மாட்டினார் அந்த பைக் ஆசாமி. பெற்றோர்கள், உறவினர்கள் அவரை சுற்றி வளைத்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற எஸ்.ஐ.
நேராக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் தெரியவந்தது, இந்த பைக் ஆசாமி, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் முன்பு பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டராம். பெயர் ராமமூர்த்தி என்று. இதையடுத்து போக்சா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது புழலில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த பைக் ரோமியோ!












Click it and Unblock the Notifications