தர்மயுத்தம்.. கூவத்தூர்.. தகுதிநீக்கம்.. 18 எம்எல்ஏக்கள் வழக்கு கடந்து வந்த நீண்ட பாதை
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும், அதிமுக கட்சியில் கடந்த ஒரு வருடமாக நடந்த களேபரங்களும் கடந்து வந்த பாதை என்பது மிகவும் நீண்டது.
Recommended Video
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும், அதிமுக கட்சியில் கடந்த ஒரு வருடமாக நடந்த களேபரங்களும் கடந்து வந்த பாதை என்பது மிகவும் நீண்டது. பல அரசியல் திருப்பங்களை இதனால் தமிழகம் கடந்த ஒரு வருடமாக சந்தித்துள்ளது.
தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட உள்ளது. பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளிக்கிறது.
இந்த வழக்கும், சட்டசபை பிரச்சனையும், பல அரசியல் களேபரங்களும் கடந்து வந்த பாதை என்பது மிகவும் நீண்டது. கடந்த வருட தொடக்கத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை இந்த அரசியல் பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.
சசிகலா முதல்வராகிறார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதன்பின் அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அன்று அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தர்மயுத்தம் தொடக்கம்
ஆனால் முதலில் பதவி விலக ஒப்புக்கொண்ட பன்னீர்செல்வம், கடைசியில் மெரினா கடற்கரையில் சென்று தியானம் செய்து, மொத்த தமிழக அரசியலை புரட்டி போட்டார். சரியாக 2 நாட்களில் பிப்ரவரி 7ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருந்தார். சசிகலா, தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததாக அவர் பரபரப்பு புகார் வைத்தார்.
உடைந்தது
எம்ஜிஆர் இறந்த போது அதிமுக எப்படி உடைந்ததோ, அதேபோல் மீண்டும் கட்சி உடைந்தது. சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரண்டு அணிகளாக கட்சி பிரிந்தது. குதிரை பேரம் தொடங்கியது. கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். சசிகலா முதல்வராக பதவியேற்க முடிவெடுத்தார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட நாட்கள் முழுக்க தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிக் கொண்டு இருந்தது.அதேசமயம் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சில எம்எல்ஏக்கள் செல்ல தொடங்கினார்கள்.
தீர்ப்பு
அதன்பின்தான் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. பிப்ரவரி 14ம் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவர் 10 வருடமும் அரசியலில் ஈடுபட முடியாமல் போனது. கடைசியாக சிறைக்கு செல்லும் முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்துவிட்டு, சசிகலா சிறைக்கு செல்கிறார்.
முதல்வர்
சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதல்வராக தேர்வு செய்கிறார். அதேபோல் அவசர அவசரமாக டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகம் மூன்றாவது முதல்வரை மூன்று மாதத்தில் கண்டது. 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பின், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தினகரன் தரப்பிற்கும் இடையில் பிரச்சனை வருகிறது.
இரட்டை இலை சின்னம்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தின் வழக்கும் நடந்து கொண்டு இருந்தது. 2017ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று இரட்டை இலை சின்ன வழக்கில், லஞ்சம் கொடுத்தார் என்று டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தது. அப்போதைய பொறுப்பு ஆளுநர் இவர்களின் கைகளை கோர்த்து இணைத்து வைத்தார். 2017 ஆகஸ்ட் 21ம் தேதியன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது.
முதல்வருக்கு எதிராக பேசினார்கள்
தினகரன் தரப்புடன் பிரச்சனை வந்த காரணத்தால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள், செப்டம்பர் 7ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்கக்கோரி ஆளுநரிடம் சென்று முறையிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் என்று எண்ணி, ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் புதுச்சேரி, கூர்க் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவோம் என்று கருதியதால், செப்டம்பர் 18ம் அன்று தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனால் அப்போதைய எடப்பாடி ஆட்சி தப்பித்தது. இதற்கு எதிராக எம்எல்ஏக்கள் எல்லோரும் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
தடை இல்லை
இதற்கு இடையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது. செப்டம்பர் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மறுஉத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும், அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டது.
தற்போது தீர்ப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் கடைசி விசாரணை ஜனவரி 23ம் தேதி நடந்து, அதன்பின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் சரியாக ஐந்து மாதங்களுக்கு பின் தற்போதுதான் இதில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்க உள்ளது.