ஆரணி அசைவ ஹோட்டலுக்கு சீல்.. உரிமையாளர் கைது.. மேலும் 18 பேர் மருத்துவமனையில் இன்று அனுமதி!
ஆரணி: ஆரணியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிட்ட மேலும் 18 பேர் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது பிரபல அசைவ ஹோட்டல். அடுத்தடுத்து இரு ஹோட்டல்கள் அமைந்துள்ள நிலையில் அந்த ஹோட்டல் ஒன்றில் கடந்த 8ஆம் தேதி உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (46), அரிசி ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (40). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும் சரண் (14) என்ற மகனும் உள்ளனர்.
ஆரணி அருகே பிரபல ஹோட்டலில் சிக்கன் உணவு சாப்பிட்ட சிறுமி பலி.. மேலும் 24 பேருக்கு சிகிச்சை!
ஹோட்டலில் சிக்கன் பிரியாணி
இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் கடந்த 8ஆம் தேதி இரவு மேற்கண்ட ஹோட்டலுக்கு சென்று சிக்கன் பிரியாணி மற்றும் தந்தூரி உணவுகளை உட்கொண்டுள்ளனர். இதையடுத்து இரவு வீட்டுக்கு வந்த அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகியன ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உடல்நிலை மோசம்
இந்த நிலையில் சிறுமி லோஷினியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இவர்களை போல் மேலும் 20 -க்கும் மேற்பட்டோரும் அதே ஹோட்டலில் சாப்பிட்டதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சேலம் பரிசோதனை கூடம்
இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்த உணவு, அதை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலம் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளரும் சமையலரும் கைது செய்யப்பட்டனர்.
பிரச்சினைகள்
இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு சிறுமி உள்பட 18 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. ஏற்கெனவே ஒரு சிறுமி பலியாகிவிட்ட நிலையில் இதுவரை இந்த ஹோட்டலில் சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.