கோழிக்குஞ்சுகள் இறந்ததால் ஆத்திரம்... 39 தெருநாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற விவசாயி!
நாய்கள் கடித்ததால்தான் இரு கோழிக்குஞ்சுகள் இறந்ததாக நினைத்துக் கொண்டு வேலூர் அருகே விவசாயி ஒருவர் 39 தெருநாய்களை விஷம் வைத்து கொன்றுள்ளார்.
வேலூர்: நாய்கள் கடித்தததால் கோழிக்குஞ்சுகள் இறந்ததாக கருதி ஒன்றல்ல இரண்டல்ல ஒரு வீட்டு நாய் உள்பட 40 நாய்களை வேலூர் விவசாயி விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அருகே உள்ளது பசுமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இறந்த தெருநாய்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் கேவி குப்பம் போலீஸில் கூறிய புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த வல்லவன் என்ற விவசாயி கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் இரு குஞ்சுகள் கடந்த வாரம் இறந்தன. தெருநாய்கள் கடித்ததால்தான் தனது கோழிக் குஞ்சுகள் இறந்ததாக வல்லவன் கருதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வல்லவன் கறி சோற்றில் விஷம் கலந்து அதை பழைய கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள், தெரு முனைகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் வைத்தார். இதை உண்ட நாய்கள் இறந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
சென்னையில் வேலை பார்த்து வரும் கதிரவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பசுமாத்தூர் கிராமத்துக்கு வந்தார். அப்போது அவரது வீட்டு நாய் வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தது. இதையடுத்து அவரும் கேவி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விவசாயி வைத்ததாக சொல்லப்படும் விஷ உணவை உட்கொண்டு ஒரு வீட்டு நாயும், 39 தெரு நாய்களும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த நாய்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவை இறந்ததற்கான காரணத்தை கொண்டே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காலடி கிராம பஞ்சாயத்தில் 40 தெருநாய்களை கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், தெருநாய்கள் அழிப்பு குழுவினரும் அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications