திருச்சி அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதி கவிழ்ந்து 2 பேர் பலி- 12 பேர் காயம்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட இருவர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை அந்த பேருந்து திருச்சியை கடந்து துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதையடுத்து டிரைவர் திருமூர்த்தி பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். பின்னர் பயணிகளை கீழே இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பி கொண்டிருந்தனர்.

டிரைவர் திருமூர்த்தி பஞ்சரான டயரை கழற்றிக்கொண்டிருந்தார். அந்த சமயம் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு பஞ்சராகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதனால் திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்து அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டு சாலையோரத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதன் மீது மோதிய தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருப்பத்தூர் அரசு பேருந்து டிரைவர் திருமூர்த்தி மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதே போல் தூத்துக்குடி சென்ற பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில்பட்டியை சேர்ந்த மலைச்சாமி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications