அரியலூர் தரைபாலத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.... 10 மணி நேரம் போராடியும் சடலமாக மீட்பு
அரியலூர் தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
அரியலூர்: திருச்சி அருகே அரியலூர் தரைப்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தை நீரில் மூழ்கி பலியானது.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திருச்சியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு ஜெனி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தார். இவர்கள் மூவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் நேற்று அரியலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வி.கைகாட்டி அருகே உள்ள நெரிஞ்சிகோரி தரைப்பாலத்தில் வாகனம் வரும் போது நிலைத்தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதையடுத்து மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். எனினும் அலெக்ஸும், சந்தியா உயிருடன் மீட்கப்பட்டனர்.
குழந்தை ஜெனியை 10 மணி நேரமாக தேடிய தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்கப்பட்டார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.