20 கிலோ வெள்ளி விநாயகர் சிலை கடலில் போடப்பட்டது
சென்னை: சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை கரைப்பின்போது ரூ. 9 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 20கிலோ வெள்ளியால் ஆன விநாயகர் சிலை படகு மூலம் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு போடப்பட்டது.
நேற்று சிவசேனா மூலம் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
காசிமேடு பகுதியில் 41 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
புளியந்தோப்பு பகுதியில் 20 கிலோ எடை கொண்ட ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகர் சிலையையும் நேற்று கடலில் போடுவதற்கான ஊர்வலம் நடந்தது.
குதிரை சாரட் வண்டியில் வெள்ளி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வண்டியை ராஜா வேடம் அணிந்த வாலிபர் ஓட்டி சென்றார். காசிமேடு கடற்கரையில் படகில் வைத்து நடுக்கடலில் வெள்ளி விநாயகரை போட்டனர்.
இதேபோல மெரீனா கடற்கரை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தனர்.
இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
இன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே விநாயகர் சிலையை கரைப்பதற்காக 110 டன் எடை தூக்கும் கிரேனும், 75 டன் எடை தூக்கும் ஒரு கிரேன்னும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. பல்வேறு தடைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.