அன்று பிரேமானந்தா... இன்று ராம் ரஹீம்... தொடரும் சேட்டை சாமியார்கள் மீதான சட்டத்தின் சாட்டையடிகள்!!
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக சாமியார் ராம் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, இதே போன்று பாலியல் புகாரில் சிக்கி இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் பிரேமானந்தா.
சென்னை : தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மட்டுமல்ல தமிழகத்தில் ஆசிரமம் நடத்திய பிரேமானந்தாவும் பாலியல் புகாரில் சிக்கி இரண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
சிர்சாவில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில் 14 ஆண்டு விசாரணைக்குப் பின்னர் அந்த தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரமம் நடத்தும் சாமியார்கள் பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவதில் ராம் ரஹீம் போல தமிழகத்திலும் ஒரு முன் உதாரணம் இருக்கிறது. அவர் தான் மறைந்த பிரேமானந்தா.
பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி பிரேமானந்தா இலங்கையின் மாத்தளையைச் சேர்ந்தவர். சித்து வேலைகளில் சிறப்பாக இருந்த பிரேமானந்தா, 1989ல் தமிழகம் வந்து திருச்சியில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். வாயில் இருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், ருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதிசயமாகச் செய்து காட்டியதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது.

லீலை சாமியார் பிரேமானந்தா
மக்களிடையே பிரபலமான இவரது ஆசிரமத்திற்கு சொத்துகள் சேர ஆரம்பித்தன. இதனையடுத்து திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கரில் தனது ஆசிரமத்தை விஸ்திகரீத்தார். அநாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இந்த ஆசிரமம் நடத்தப்பட்டது,1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கியபோதுதான் நிலைமை விபரீதமாயிற்று.

வரிந்து கட்டி எழுதிய பத்திரிக்கைகள்
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து போலுசாரிடம் புகார் அளித்தனர். அப்போதுதான் தோண்டத் தோண்ட பல பூதங்கள் கிளம்பின.

குற்றம் நிரூபனம்
நீதிமன்ற அனுமதியுடன் பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அந்த விஷயத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு பிரேமானந்தா தான் காரணம் என்பது நிரூபனமானது. சிறுமிகளுக்கு நடந்த பாலியல் கொடூரங்களை தட்டிக் கேட்ட ரவி என்ற ஆசிரம உதவியாளர் கொல்லப்பட்டு ஆசிரமத்திற்குள்ளாகவே புதைக்கப்பட்டார்.

இரட்டை ஆயுள் தண்டனை
விசாரணை, ஆதாரங்களின் அடிப்படையில் 1997ம் ஆண்டு சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002ல் ஹைகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது. தனது தண்டனை காலத்திலேயே 2011ம் ஆண்டு தனது 59 ஆவது வயதில் மஞ்சள்காமாலை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி பிரேமானந்தா காலமானார்.

காலம் திரும்புகிறது
தமிழக பிரேமானந்தா போல மன்மத லீலைகளில் ஈடுபட்ட மாடர்ன் சாமியார் ராம் ரஹீமிற்கு நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பை அளித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு சாமியார் வழக்கில் நீதிமன்றம் தனது கடுமையான தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications