தமிழகம் மீண்டும் 'பரபர'- அக்.25-ல் ஜெ. மரண விசாரணை தொடக்கம்; 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் 25-ந் தேதி பரபரப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. அக்.25-ல் ஜெயலலிதா மர்ம மரண விசாரணை தொடங்குகிறது; அதேபோல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை: தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியல் களமும் மீண்டும் பரபரக்க போகிறது. வரும் அக்டோபர் 25-ந்தேதியன்று ஜெயலலிதா மர்ம மரண விசாரணை சென்னையில் தொடங்க உள்ளது. டெல்லி சிபிஐ நீதிமன்றமோ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி வழங்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 25-ந் தேதியன்று தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் நீதிபதி ஷைனி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
ஜெ. மர்ம மரண விசாரணை
நீதிபதி ஷைனி அக்.25-ல் தெரிவிக்கப் போகும் தீர்ப்பு தேதி இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும். அதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையும் வரும் 25-ந் தேதி தொடங்க இருக்கிறது.
ஜெ. கட்சியே அமைத்த விசாரணை கமிஷன்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அவரது ஆளும் கட்சியே விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
புதன்கிழமை முதல் விசாரணை
இந்த விசாரணை கமிஷனுக்கு சென்னை எழிலகத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறை அமைக்கும் பணிகள் திங்களன்று முடிவடைகிறது.
யாரெல்லாம் விசாரிக்கப்படுவர்?
இதையடுத்து 25-ந் தேதியன்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையை தொடங்க உள்ளது. இந்த விசாரணை எப்படி அமையும்; யாரெல்லாம் விசாரிக்கப்படுவார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.