விழுப்புரம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தன் மகள் கலைச்செல்வி(16) மற்றும் பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகர்(35) ஆகியோருடன் காரில் மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்றனர். சாமி தரிசனம் முடிந்த பின்னர் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று பிற்பகல் அவர்களது கார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. தாறு மாறாக ஓடிய கார் எதிரே செஞ்சியில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது மோதியது.
இதில் கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்த செஞ்சி, போலீசாரும், தீயணைப்பு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிராம மக்கள் உதவியுடன், மீட்பு பணிகள் நடைபெற்றன.
இருப்பினும் காரில் இருந்த நாகராஜ், சந்திரசேகர், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய கலைச்செல்வியை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த, 27 பயணிகள் காயமடைந்தனர். அனைவரும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.