தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் 32 பேர் ராஜினாமா!
சென்னை: தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 32 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் ஆவர்.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து 3ஆம் தேதி (இன்று) பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடம் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக மாணவர் காங்கிரஸ் பிரிவு தலைவர் சுனில் ராஜா உட்பட 12 மாநில நிர்வாகிகள், 19 மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை நேற்றிரவு கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகனைத் தொடர்ந்து வாசன் ஆதரவு நிர்வாகிகள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவதால் நெருக்கடி உருவாகியுள்ளது.