3-வது மொழி கட்டாயம் இல்லை.. மகாராஷ்டிரா முடிவு- மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு என்ன? ஸ்டாலின் கேள்வி
சென்னை: புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3-வது மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டியது இல்லை என்கிற மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முடிவெடுத்துள்ளது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு என்ன சொல்லப் போகிறது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மகாராஷ்டிராவில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்நிலையில், பிரதமர் அவர்களும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்:
1) தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் பட்னாவிஸ் அவர்களின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
2) தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?
3) மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சிக்கல் என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் தொடக்கப் பள்ளிகளிலும் 3-வது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மராத்தி மொழியை அழிக்கும் வகையில் இந்தி திணிப்பை மேற்கொள்வதா? என கண்டனங்கள் குவிந்தன.
இதனையடுத்தே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அம்மாநிலத்தில் இந்தி மொழி கட்டாயம் அல்ல- மராத்தி மொழிதான் கட்டாயம் என உத்தரவிட்டார். இதனை முன்வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications