சென்னையில் ரேபிஸ் பலி எதிரொலி... முதல்கட்டமாக 40,000 தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி
சென்னை: சென்னையில் முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் தாம்பரம் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்க்குட்டி கடித்ததில் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி பரிதாபமாகப் பலியானார். நாய்க்கடியை சாதாரணமாக நினைத்து அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்பதற்கு அம்மாணவரின் மரணம் ஒரு உதாரணம்.
சென்னையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் நடந்து செல்பவர்களை மட்டுமல்ல, வாகனத்தில் செல்பவர்களையும் துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன. எனவே எதிர்பாராத விதமாக நாய்க்கடிக்கு ஆளானாலும் ரேபிஸ் நோய்க்கு பலியாகாமல் இருக்கும் வண்ணம் சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசிப் போட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன் முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
1.75 தெருநாய்கள்...
கடந்த ஓராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 1.75 லட்சம் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் புகார்கள்....
சென்னையில் குறிப்பாக தண்டையார்பேட்டை, ராய புரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையார், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றன.
விரிவாக்கப்பட்ட மண்டலங்களில்...
அதேபோல், திருவொற்றியூர், மணலி, மாதவரம், வளசரவாக்கம், அம்பத் தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய விரிவாக்கப்பட்ட மண்டலங்களிலும் தெரு நாய்களின் தொல்லை மிக அதிகமாகவே உள்ளது.
அச்சத்தில் பொதுமக்கள்...
தெருவில், சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் தெருநாய்கள் நடந்து செல்பவர்களை மட்டுமல்லாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளைக்கூட மிகுந்த அச்சத்துக்குள்ளாக்குகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் குழந்தைகளை தெருவில் விளையாட விடக் கூட அச்சப்படுகின்றனர்.
பெருகி வரும் தெருநாய்கள்...
மாநகராட்சியால் தினந்தோறும் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப் படுவதோடு, வெறி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், தெருநாய்கள் குறித்த புகார்கள் குறைந்தபாடில்லை.
முதல்கட்டமாக 40 ஆயிரம் தடுப்பூசிகள்....
இதனால், எதிர்பாராதவிதமாக தெரு நாய்களால் கடிபடும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனத் தெரிகிறது. அதன்படி, வெறிநோய் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள்....
இந்தத் தடுப்பூசி போடும் பணியில் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பணியாற்ற இருக்கிறார்கள். இதற்காக சென்னையில் உள்ள தெருநாய்கள் குறித்த கண்க்கெடுப்பு முடுக்கி விடப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.