எங்க போனாலும் ஐ.டி கார்டோட போங்க!… ஆபரேசன் ஆம்லா நடக்குது!!
சென்னை: சார் உங்க ஐ.டி கார்டு காட்டுங்க... இல்லையா நீங்க ஆபிஸ்க்கு உள்ளே போகமுடியாது... இது சென்னை தலைமைச் செயலகத்தின் இன்றைய முக்கிய காட்சியாக இருந்தது.
தலைமைச் செயலகம் மட்டுமல்லாது, சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் இன்றைக்கு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
இன்றைக்கு என்ன விசேஷம் ஏன் இத்தனை கெடுபிடி என்று விசாரித்தால் ‘ஆபரேசன் ஆம்லா' என்று பதிலளித்தனர்.
ஆபரேசன் ஆம்லா
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் 6 மாதத்துக்கு ஒரு முறை ஆபரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
உஷார் போலீசார்
சென்னையில் பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், தியேட்டர்கள், சந்தைகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 14 கடலோர மாவட்டங்களில் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் ஊடுருவல்
மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போர்வையில் கடல் பகுதியில் இருந்து நகருக்குள் ஊடுருவார்கள். அவர்களை தமிழக போலீசார் பிடிக்க வேண்டும். இதுவே இந்த பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சமாகும்.
போலீஸ் கட்டுப்பாட்டில்
இன்று காலையில் தொடங்கிய இந்த ‘‘ஆபரேஷன் ஆம்லா'' ஒத்திகையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், மாநகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் இதனை ஒருங்கிணைத்தனர்.
தலைமைச் செயலகத்தில்
இன்று காலையில் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள், பொதுமக்களின் உடமைகள் மட்டுமல்லாது அலுவலக பணியாளர்களின் பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர். கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரீனா கடற்கரையில்
மெரினா கடற்கரை பகுதியில் அண்ணா சதுக்கம் போலீசார் தனி படகில் சென்று தீவிரவாதிகள் போல ஊடுருவ முயன்ற 10 பேரை மடக்கி பிடித்தனர்.
மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். கடலோர பகுதியில் உள்ள விடுதிகள், மற்றும் ஓட்டல்களில் யாராவது மர்ம நபர்கள் தங்கி உள்ளார்களா என விசாரித்தனர்.
மடக்கிய போலீசார்.
காசிமேட்டில் கடலோர பகுதியில் நுழைந்த 5 பேரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடித்தனர். இதேபோல் சென்னையில் தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய மத்திய பாதுகாப்பு படையினர் 40 பேர் சிக்கினார்கள்.
தூத்துக்குடியில்
தூத்துக்குடி தருவை குளத்தில் ஊருவிய 5 பேரும், நாகப்பட்டினத்தில் புகுந்த 5 பேரும் சிக்கினார்கள்.இதற்கிடையே தூத்துக்குடி சின்னக்காயல் பகுதியில் தீவிரவாதிகள் போல ஊடுருவிய 3 பேர் பிடிபட்டனர். அதே பகுதியில் வேறொரு இடத்தில் 2 பேர் சிக்கினார்கள்.
ராமேஸ்வரத்தில் விசாரணை
மேலும் ராமேசுவரம் மண்டபம் பகுதியில் 6 பேரும், ராமநாதபுரம் மாவட்டம் சோலைக்குடி கடல் பகுதியில் 4 பேரும் பிடிபட்டனர்.
கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள் படகிலும் மர்ம நபர்கள் உள்ளார்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குமரியில் கண்காணிப்பு
இதே போல குமரி மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 14 கடலோர மாவட்டங்களிலும் சேர்த்து 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் இன்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடலோர காவல் படையினர் மீனவர்களின் துணையுடன் 39 படகுகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். 24 படகுகள் கடலோர காவல் படைக்கு சொந்தமானவை. மீதி 15 படகுகள் பாதுகாப்பு ஒத்திகைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டவை.
48 மணிநேர ஒத்திகை
தமிழ்நாட்டில் இத்தகைய பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 20ஆம் தேதி காலை 6 மணி வரை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை, தமிழக போலீசார் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6 முறை ஆபரேஷன் ஆம்லா ஒத்திகை நடந்து உள்ளது. தற்போது 7வது முறையாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.