முல்லைப்பெரியாறு அணை மதகுகள் நன்றாக உள்ளன: கண்காணிப்பு துணைக்குழு உறுதி!
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் நன்றாக உள்ளதாக, கண்காணிப்பு துணைக் குழு உறுதி செய்துள்ளது.
கேரளாவிலுள்ள பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள் திங்கட்கிழமையன்று தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன், அதிவிரைவு படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றவர், அங்கு அத்துமீறி அணை பகுதியில் நுழைந்து, அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தியதாகவும், இதை தட்டிக்கேட்ட தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவனை தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்துள்ளதாகவும், 13வது மதகும் பழுதடைந்து உள்ளது என்றும் பீர்மேடு எம்.எல்.ஏ. கூறினார். இந்நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜித்குமார் பாட்டீல் மற்றும் இடுக்கி மாவட்ட கூடுதல் நீதிபதி ஆகியோர் நேற்று (18ஆம் தேதி) முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாங்கள் அணையை பார்வையிட மட்டுமே வந்துள்ளோம். ஆய்வு செய்ய வரவில்லை. பேபி அணை மற்றும் மெயின் அணை ஆகியவற்றில் இருக்கும் பிரச்னைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு பார்த்துக் கொள்ளும். 13வது மதகில் உள்ள பிரச்னையை இன்று அணையை ஆய்வு செய்ய வரவுள்ள துணை குழு ஆய்வு செய்வார்கள்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து துணைக் குழுவைச் சேர்ந்த மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஹரிஷ்கிரிஷ், கேரள தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரசீடு, ஜார்ஜ் டேனியல், தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மாதவன், சௌந்தர் ஆகியோர் நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு வந்தனர்.
அணைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தினர். அப்போது சரியாக இயங்கவில்லை என கேரளா புகார் தெரிவித்த 12 மற்றும் 13-வது மதகுகளை பல்வேறு நிலைகளில் இயக்கி பார்த்து பரிசோதனை செய்தனர்.
அப்போது அதில் சில பகுதிகளில் பழுது ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை புதுப்பித்த அவர்கள், 13வது மதகுவில் வேறு பிரச்னை ஏதும் இல்லை. அது நன்றாக உள்ளது என்ற ரிப்போர்ட்டிலும் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பு துணைக்குழுத் தலைவர் ஹரீஷ் கிரீஷ், புகாருக்கு உள்ளான இரண்டு மதகுகளும் நல்ல நிலையில் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக ஆய்வு நடத்திய இடுக்கி மாவட்ட ஆட்சியர் அணை நீர்மட்டம், 142 அடியை எட்டும்போது, அந்த தகவலை கேரளாவுக்கு முன்னதாகவே தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.