லோடு ஆட்டோவில் லேசாக உரசிய பைக்! திருச்செந்தூரில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு! போலீஸார் குவிப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே பைக் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோவில் லேசாக உரசியதாக சொல்லப்படும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து 5 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தது.
திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமையல் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய லோடு ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (60) என்பவர் பைக்கில் வந்துள்ளார். அப்போது ஜெபராஜின் பைக் லோடு ஆட்டோவில் உரசியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெபராஜ், கண்ணனை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக சிலர் நீல்புரத்திற்குச் சென்று ஜெபராஜிடம் நியாயம் கேட்டதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் எதிர்தரப்பினர் ஜெபராஜை அரிவாளால் வெட்டினர்.
இதில் தலையில் படுகாயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ஜெபராஜின் மகன் நவீன் (32) திருச்செந்தூருக்கு சென்றார். தனது தந்தை தாக்கப்பட்டது தொடர்பாக எதிர்தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் சென்றார்.
அங்கு இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அரிவாளாலும் உருட்டுக் கட்டையாலும் தாக்கித் கொண்டனர். இதில் நவீன் (21), கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அங்குள்ள நடைபாதை ஹோட்டலில் உணவு வாங்க வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயபிரகாஷுக்கும் (27) அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் போக்கால் 5 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications