60 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய கண்ணாடி... சென்னை ஏர்போர்ட்டில் 62வது 'டமால்'!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று மீண்டும் ஒரு கண்ணாடி உடைந்து விழுந்தது. கிட்டத்தட்ட 60 அடி உயரத்திலிருந்து கண்ணாடி உடைந்து விழுந்ததால் அனைவரும் பதட்டமடைந்தனர் ஆனால் கண்ணாடி விழுந்த இடம் கழிப்பறை பகுதி என்பதால் யாருக்கும் காயம் இல்லை.
கடந்த 4 வருடமாக இப்படித்தான் அடிக்கடி கண்ணாடி உடைந்து விழுந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு 62வது முறையாக அது நடந்துள்ளது.
சென்னை விமான நிலையம் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. அன்று முதல் அடிக்கடி கண்ணாடி உடைந்து விழுகிறது. கண்ணாடிகள் சரிவர ஒட்டப்படாமல் அரைகுறை வேலை பார்த்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 2012ம் ஆண்டு முதல் பன்னாட்டு முனையப் பகுதியும் திறக்கப்படாமல் உள்ளது.
தொடர்ந்து கண்ணாடிகள் உடைந்து விழுவதைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் கோர்ட்டில் வழக்கும் போட்டுள்ளது. இந்த நிலையில் பன்னாட்டு முனையத்தின் 4வது கேட் பகுதியில் கழிப்பறை உள்ள இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து பெரிய கண்ணாடி உடைந்து கீழே விழுந்து சில்லு சில்லாக நொறுங்கியது.
கண்ணாடி உடைந்த சப்தம் பயங்கரமாக கேட்டதால் விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதிகாரிகளும், பாதுகாவலர்களும் ஓடி வந்தனர். பயணிகளும் பீதியடைந்தனர்.
62வது முறையாக கண்ணாடி உடைந்தும் கூட இதுவரை விமான நிலையத்தின் தரப்பிலோ, மத்திய அரசு சார்பிலோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, அனைவரும் வாயை மூடிக் கொண்டு உள்ளனர் என்பது வேதனைக்குரியது.