மாற்றுத் திறனாளி பெண்ணைப் பலாத்காரம் செய்துவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
தருமபுரி: தருமபுரியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகேயுள்ள மூக்கனூரில் கடந்த 2002 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 19 வயது பெண் ஒருவரை அருகேயுள்ள ஜக்குபட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் பழங்குடியினத்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
பெண்ணைக் கடத்துவது, பாலியல் பலாத்காரம் செய்வது ஆகிய இரு பிரிவுகள் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ராஜாவுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கடுங்காவல் சிறைத் தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.