ஆந்திரா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?
ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன.
நிலத்தடி நீர்மட்டமும் அடிவாங்கியுள்ளதால் சென்னை உட்பட பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கத்திரியை போன்று வெயில் சுட்டெரித்தது.
குளிர்வித்த வெப்பச்சலனம்
இதன்காரணமாக மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர். ஆனாலும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பல இடங்களில் திடீர் மழை கொட்டித் தீர்த்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதேபகுதியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பில்லை
இதன் காரணமாக தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.எனினும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு நேரங்களில்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.